நவீன மலையாளப் புனைவெழுத்தில் அனல் காற்றைப் படரச் செய்த ஆரம்பகாலப் படைப்புகளில் முக்கியமானது ‘தோட்டியின் மகன்.’ தகழி சிவசங்கரப் பிள்ளை 1947இல் எழுதிய நாவல். இலக்கியத்தில் மட்டுமல்ல; சமூகப் பார்வையிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. அதுவரை இலக்கியத்தில் யாரும் பார்க்காத களம்-சேரி; கேட்காத மொழி-பாமரக் கொச்சை; முகர அஞ்சிய வாடை-மலம்; வாழ்ந்திராத வாழ்வு - தோட்டிப் பிழைப்பு என்று பின்தள்ளப்பட்ட உலகைப் பொதுக் கவனத்துக்கு வைத்தது நாவல். சமூக அரங்கிலும் அரசியல் துறையிலும் அதன் மற்றொலிகள் எழுந்தன என்பது நாவலின் வெற்றி. விமர்சனங்கள் கூறப்பட்டாலும் இன்றும் தொடர்ந்து வாசிக்கப்பட்டுவரும் இந்த நாவலே மலையாளத்தில் தலித் வாழ்வை இலக்கியமாக்கியதில் முன்னோடிப் புனைவு.
தகழி சிவசங்கர பிள்ளை
தகழி சிவசங்கரப் பிள்ளை (1912 - 1999) ஆலப்புழையில் வழக்குரைஞராகப் பணியாற்றினார். முதல் சிறுகதைத் தொகுப்பு 1929இலும் முதல் நாவல் 1934இலும் வெளியாயின. சுமார் நாற்பது நாவல்களும் இருநூறு கதைகளும் எழுதியுள்ளார். அநேகப் படைப்புகள் இந்திய மொழிகளிலும் ஐரோப்பிய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. சாகித்ய அகாதமி பரிசும் (‘செம்மீன்,’ 1958) கேரள சாகித்ய அகாதமி பரிசும் (‘ஏணிப்படிகள்,’ 1965), வயலார் நினைவுப் பரிசும் (‘கயிறு,’ 1980) பெற்றவர். 1984இல் ஞானபீடப் பரிசு பெற்றார். 1985இல் பத்மபூஷன் விருது கிடைத்தது. கேரளப் பல்கலைக் கழகமும் மகாத்மா காந்தி பல்கலைக்கழகமும் டி.லிட். பட்டம் அளித்துள்ளன. மனைவி : கமலாட்சி அம்மா. ஐந்து குழந்தைகள். தமிழின் முக்கியப் படைப்பாளிகளில் ஒருவராகிய சுந்தர ராமசாமி, மலையாளத்திலிருந்தும் ஆங்கிலத்திலிருந்தும் குறிப்பிடத்தகுந்த பல மொழிபெயர்ப்புகளைச் செய்திருக்கிறார். தகழியின் ‘செம்மீன்’ (1962) நாவலையும் மொழிபெயர்த்திருக்கிறார்.
The lives of the scavengers and their worlds are picturised in a realistic way. Written in 1947 this novel anticipated the emergence of Dalit writing.<\p>