புதுமைப்பித்தனின் ஒரே மகள் தினகரி. அவர் பிறந்த இரண்டு ஆண்டுகளில் புதுமைப்பித்தன் காலமாகி விட்டார். இதிலும் பெரும்பகுதிக் காலம் அவர் சென்னையிலும் பூனாவிலும் திரைக்கதை எழுதுவதில் செலவிடும் சூழல். காச நோயால் அவர் காலமானபொழுது தினகரிக்கு விவரம் தெரியாத வயது. யாருடைய ஆதரவுமின்றி கமலா விருத்தாசலம் தினகரியை வளர்த்து ஆளாக்கினார். இந்த அனுபவங்களைக் கண்ணீரில் தோய்த்து நெக்குருக வடித்திருக்கிறார் தினகரி சொக்கலிங்கம். புதுமைப்பித்தன் அன்பர்கள் தவிர்க்க முடியாத நூல் இது.
நூலுக்கு சித்ரா பாலசுப்ரமணியன் எழுதிய நூல் அறிமுகம் *
“தினகரிக்கு இரண்டரை வயதாகும் போது புதுமைப்பித்தன் காலமாகிவிடுகிறார். அக்குழந்தை வளரும் போதும் அருகிருந்து அதன் மழலைச் சொல்லையோ விளையாட்டையோ அனுபவிக்கும் பேறும் அவருக்கு வாய்க்கவில்லை. இப்புத்தகத்தின் பிற்சேர்க்கையாத் தரப்பட்டிருக்கும் புதுமைப்பித்தனின் கடிதங்களைப் பார்த்தால், மனிதர் ஒவ்வொரு நொடியும் அக்குழந்தையை எண்ணி எண்ணியே வாழ்ந்திருக்கிறார் என்பது புரியும். இறப்பு அருகில் வந்துவிட்டது என அவர் உணர்ந்துகொண்ட நாட்களில் அவர் மனம் எவ்வளவு கொந்தளித்திருக்கும்?!”