-வசந்தி தேவியின் அணுகுமுறை லட்சிய நோக்கும் யதார்த்தப் பார்வையும் இணைந்தது. நடைமுறைச் சாத்தியமற்ற கனவுகளைப் பற்றி அவர் இந்த நூலில் எங்கும் பேசவில்லை. கல்வியின் பயனை மொத்தச் சமூகமும் பெறவில்லை என்றும், அதில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றன என்றும், உயர் ஜாதியினரும் வசதிபடைத்தவர்களும் பெறும் கல்வியை ஒடுக்கப்பட்ட மக்களும் ஏழைகளும் இன்று பெற முடியவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்துகிறார். ஆகவே தமிழ்வழிக் கல்வியில் அவர் கொண்டிருக்கும் நம்பிக்கை கல்வியின் குறிக்கோளில் அவர் கொண்டிருக்கும் நம்பிக்கையோடு பின்னிப் பிணைந்து கிடக்கிறது. சமூகத்தைவிட்டு விலகி நிற்கும் கல்வி பயனற்றது என்பதே அவரது கருத்து.