இயற்பெயர் ரங்கநாதன். மயிலாடுதுறையை அடுத்த திருஇந்தளூரில் பிறந்தவர். பள்ளிக் கல்விக்குப் பிறகு பள்ளி ஆசிரியராகவும் சிறப்புப் பணி ஆய்வாளராகவும் பணியாற்றினார். பொதுப்பணித் துறை ஊழியராக வேலை கிடைத்துச் சென்னையில் குடியேறினார். பதினெட்டு வயதில் அச்சேறிய தோத்திரப் பாடல் நூல் முதல் வெளியீடு. ‘திருமந்திரம்’ வாசிப்பின் பாதிப்பில் ஞானக்கூத்தன் என்ற புனைபெயரைச் சூட்டிக்கொண்டார். நடை சிற்றிதழில் கவிதைகள் எழுதினார். கசடதபற இதழைத் தொடங்கிய இலக்கியக் குழாமில் ஒருவர். ‘ழ’ கவிதை ஏட்டை ஆத்மாநாம், ஆனந்த், ஆர். ராஜகோபாலன் ஆகியோருடன் இணைந்து வெளியிட்டார். கவனம் இதழின் ஆசிரியராகவும் இருந்தார்.
அகில இந்தியக் கவியரங்குகளிலும் கருத்தரங்குகளிலும், சிங்கப்பூர், பிரான்சு நாடுகளில் நடந்த உலகக் கவிதை வாசிப்பரங்குகளிலும் பங்கேற்றிருக்கிறார்.
கவிதை நூல்கள்: ‘அன்று வேறு கிழமை’ (1973), ‘சூரியனுக்குப் பின்பக்கம்’ (1980), ‘கடற்கரையில் சில மரங்கள்’ (1983), ‘மீண்டும் அவர்கள்’ (1994), ‘ஞானக்கூத்தன் கவிதைகள்’ (1998), ‘பென்சில் படங்கள்’ (2002), ‘ஞானக்கூத்தன் கவிதைகள்’ (2008), ‘என் உளம் நிற்றி நீ’ (2014), ‘இம்பர் உலகம்’ (2016), ‘ஞானக்கூத்தன் கவிதைகள் (முழுத் தொகுப்பு)’ (2018).
கட்டுரைத் தொகுப்புகள்: ‘கவிதைக்காக’ (1996), ‘கவிதைகளுடன் ஒரு சம்வாதம்’ (2004), ‘ஞானக்கூத்தன் நேர்காணல்கள்’ (2020) தொகுப்பு ஒன்றும் வெளிவந்துள்ளது.
2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் 78ஆவது வயதில் மறைந்தார்.
மனைவி: சரோஜா ரங்கநாதன் (மறைவு), மகன்கள்: திவாகர் ரங்கநாதன், விஜயகிருஷ்ணா ரங்கநாதன்.