-இஸ்லாமிய சமூகம் இறுகிப்போன ஒரு சமூகம், அது வெளிக்குத் தெரியாத இருண்ட பகுதிகளைக் கொண்டது எனும் மாயையைத் தமிழில் முதலில் உடைத்தெறிந்த நாவல். கிராமத் தலைவனும் ஊர் முதல் குடியுமான வடக்கு வீட்டு அகமதுக்கண்ணு முதலாளியின் முன் அடங்க மறுக்கிறான். சுறாப் பீலி வியாபாரம் செய்யும் மஹ்மூது, தென் பத்தனைத் தேடி வந்த சித்து வேலைகள் தெரிந்த மாலத்தீவு தங்ஙளையும் அவன் உதாசீனம் செய்கிறான். இதை மீறலின் குறியீடாகக் கருதும் வாசக மனம் கூடவே மஹ்மூதின் மனைவியையும் மகளையும் நினைத்து விவரித்துச் செல்லும்போதே அதன் அடிநாதமாக, வெற்றுப் பிரதாபம் காரணமாக நசிந்துகொண்டிருக்கும் முதலாளியைப் பற்றிய பரிதாபமும் இழைந்து செல்கிறது. நாவல் கோடிகாட்டும் அம்சங்கள்கூட வேதியியல் மாற்றங்களுக்கு உள்ளாகி வாசக மனங்களை உலுக்குவது இந்நாவலின் குறிப்பிடத்தக்க மற்றொரு சிறப்பு.
தோப்பில் முஹம்மது மீரான்
‘புத்தம் வீடு’ - எளிய மொழியில் சொல்லப்பட்ட காதல் கதையாகத் தோற்றம்கொள்ளும் நாவல். லிஸியும் தங்கராஜும் இளம்பருவத்தில் கொண்ட ஈர்ப்பு காதலாக முதிர்ந்து திருமணத்தில் கனிய நீண்ட காலம் காத்திருக்கிறார்கள். தடைகளைக் கண்டு அஞ்சுகிறார்கள். இறுதியில் இணைகிறார்கள். முதல் சந்திப்புக்கும் முதல் நெருக்கத்துக்கும் இடையில் வருடங்கள் கடந்து போகின்றன. இடங்கள் மாறுகின்றன. மனிதர்கள் கடந்து போகிறார்கள். அவர்கள் உறவாடுகிறார்கள். காசுக்காகத் தகப்பனை ஏய்க்கிறார்கள். பகைகொண்டு சொந்தச் சகோதரனையே கொல்கிறார்கள். குலப்பெருமை பேசுகிறார்கள். புதிய தலைமுறையோடு பிணங்குகிறார்கள். காலத்துக்கேற்ப மாறுகிறார்கள். இது லிஸியின் கதை. மூன்று தலைமுறைகளை இணைக்கும் கண்ணி அவள். அவளை மையமாகக் கொண்டு விரியும் கிராம உறவுகளின் கதை. ஆர்ப்பாட்டமில்லாமல் வெளிப்படும் அவளுடைய சிநேகச் சரடின் மறுமுனையில்தான் அவளைத் தூற்றியவர்களும் விரும்பியவர்களும் இயங்குகிறார்கள். படைப்பு இயல்பால் தன்னை நிலைநிறுத்திக்கொண்ட இலக்கிய ஆக்கங்களில் ஒன்று ‘புத்தம் வீடு’. கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கு முன்பு எழுதப்பட்டது. எனினும் இன்னும் வாசிப்பில் சுவை குன்றாமல் துலங்குகிறது.
ஹெப்ஸிபா ஜேசுதாசன்
ஹெப்ஸிபா ஜேசுதாசன் (1925 - 2012) குமரிமாவட்டம் புலிப்புனத்தைச் சேர்ந்தவர். பள்ளிப்படிப்பை பர்மாவிலும் தமிழகத்திலும் மேற்கொண்டார். திருவனந்தபுரம் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் ஹானர்ஸ் பட்டம் பெற்றார். கணவர் பேராசிரியர் ஜேசுதாசனின் ஊக்குவிப்பைத் தொடர்ந்து படைப்பாக்கத்தில் ஈடுபட்டார். ‘புத்தம் வீடு’, ‘மா - னி’, ‘டாக்டர் செல்லப்பா’, ‘அனாதை’ ஆகிய நாவல்களை எழுதியுள்ளார். ‘தமிழர் - தமிழிலக்கியம் வாயிலாக’ என்ற நூல்வரிசையைக் கணவருடன் இணைந்து உருவாக்கினார். திருவனந்தபுரம் மகளிர் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றார். 2012ஆம் ஆண்டு காலமானார்.