இயக்கங்களின் வரலாறு பொதுமக்கள் பரப்பிற்குள் கட்டமைக்கப்படுகிறது. கட்டமைக்கப்பட்ட வரலாற்றில் அடங்கும் மனிதர்கள், இயக்கங்களை வழிநடத்துகிறார்கள். அவ்வாறான பெண்ணின் கதை இது. கொண்டபல்லி கோடேஸ்வரம்மா என்ற ஒரு பெண்மணியின் சுயசரிதை மட்டுமல்ல; பொதுவுடைமைக் கட்சியின் ஒரு கால நிகழ்வை, தலைவர்களின் நடப்புகளுக்குச் சாட்சி கூறும் நூல் இது. காலப்பெண்ணின் வாழ்வு இந்தத் தன்வரலாற்றில் பொதிந்து கிடக்கிறது. கொண்டபல்லி கோடேஸ்வரம்மா தன் அரசியல் பயணத்தின் தோழமையாக இலக்கியத்தையும் தேர்ந்தெடுத்துக்கொள்கிறார். அவ்வாறே பாடல்களும் வீதி நாடகங்களும் அவரோடு சேர்ந்துகொண்டன. கனவுகள், அதிகாரத் துரத்தல்களின் பின்னணியில் தலைமறைவு வாழ்வு, காதல், உறவுகள், பெண் இயக்கங்கள், சங்கங்கள், போராட்டங்களை விவரிக்கிறார். மக்கள் பரப்பில் சமத்துவத்தையும் மறுமலர்ச்சியையும் உருவாக்க உழைத்தவர்களின் தடங்கள்தான் இந்நூல். பெண்களும் தலித்துகளும் தொழிலாளர்களும் ஒடுக்கப்படுகிற காலத்தில், மீட்சிக்காய்ப் போராடிய இயக்கத்தின் வரலாறு இது.
கொண்டபல்லி கோடேஸ்வரம்மா
கொண்டபல்லி கோடேஸ்வரம்மா (பி. 1921) இளம் வயதிலேயே மணம், பின் கணவனின் மரணத்தையும் எதிர்கொண்ட கொண்டபல்லி கோடேஸ்வரம்மா 1939இல் இடதுசாரித் தலைவரான கொண்டபல்லி சீதாராமையாவை மணம்புரிந்துகொண்டார். 1940 முதல் தீவிர அரசியல் கலைச் செயல்பாடுகளில் ஈடுபட்டுவரும் இவரது வாழ்க்கை, சுதந்திரப் போராட்டம், கம்யூனிஸ்டு கட்சி, நக்ஸலைட் போராட்டங்கள் ஆகிய இயக்கங்களின் வரலாற்றோடு இணைந்தது. பல வருடத் தலைமறைவு வாழ்க்கை, சீதாராமையாவின் பிரிவு, பிள்ளைகளின் இளவயது மரணம் இவற்றைத் தனியாக எதிர்கொண்டு, தனக்கான சிந்தனைகளை உருவாக்கிக்கொண்டு, பேரக்குழந்தைகளை ஆளாக்கிய கோடேஸ்வரம்மா ஆந்திர மஹிளா சபா, விகாஸ வித்யாவனம் ஆகிய அமைப்புகளோடு இணைந்து செயல்பட்டார். இரண்டு கதைத் தொகுப்புகள், ஒரு கவிதைத் தொகுப்பு ஆகியன இவர் எழுதி வெளிவந்திருக்கின்றன.