-இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாடுகளில், சூழலியல் விழிப்புணர்வு தோன்ற முடியாது என்பதே அயல்நாட்டுச் சமூகவியலாளர்களின் கருத்து. அக்கருத்து தவறு என்பதை வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹாவின் இந்நூல் நிரூபிக்கிறது.
மேற்கில் சுற்று சூழல் விழிப்புணர்வின் முதல் அசைவாகக் கருதப்படும் ரேச்சல் கார்சனின் ‘சைலன்ட் ஸ்பிரிங் (1962)’ நூல் வெளியாவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் காந்தி, தாகூர், ராதாகமல் முகர்ஜி, ஜே.சி. குமரப்பா, பேட்ரிக் கெடஸ், ஆல்பெர்ட்-கேபிரியல்லா ஹோவர்ட், மீரா, வெரியர் எல்வின், கே.எம். முன்ஷி, மா. கிருஷ்ணன் ஆகிய பத்து அறிஞர்கள் சுற்றுச்சூழலைப் பற்றிய அக்கறையைத் தங்கள் பணியிலும் எழுத்திலும் வெளிப்படுத்தினார்கள்.
நூறாண்டு காலத்தில் வெளிப்படுத்தப்பட்ட அவர்களது சிந்தனைகளை, அரசியல் -சமூகப் பின்புலத்தில் வழங்கும் இந்நூல் குஹாவின் ஆய்வுப் புலமைக்கு இன்னொரு சான்று.
தமிழில் சுற்றுச்சூழலியல் எழுத்தின் முன்னோடியான தியடோர் பாஸ்கரனின் இந்த எளிமையான மொழிபெயர்ப்பு சுற்றுச்சூழல் சிந்தனைக்கு வளமான சேர்க்கை.