சுபி (புழுதி வலைதளத்திலிருந்து)
26 Feb 2026
நம் கிராமங்களில் அன்றாடம் காணும் ஒருத்தியைத்தான் அவர் கதைகள் வழியாகப் பார்க்கிறோம். ஆகமொத்தம் எந்தப் பருவம் என்றாலும் ஆணை விட பெண்ணுக்குத் தான் அதிகப் போராட்டம். பொருளாதார, மன, உடல் ரீதியான போராட்டக் களத்தில் தினமும் வாழவேண்டிய கட்டாயம் இன்னும் விதிக்கப் பட்டிருக்கிறது. சுஜாதாவின் கதைகள் எந்த இடத்தில் வெற்றி பெறுகின்றன என்றால் பெரும்பான்மையான அளவில் இருக்கும் அடித்தட்டு, நடுத்தர வர்க்கப் பெண்களின் வாழ்வியலை அலசுவதால் மட்டுமே. விதிவிலக்குகள் பற்றிப் பேசாமல் இயல்புகளைப் பேசுவதாலும். காலமாற்றங்களில் முற்றிலும் அழிந்து போகாத, இன்னும் நம் ஆதாரமாக இருக்கும் குடும்ப அமைப்பின் கண்ணுக்குப் புலப்படாத, புலப்படும் சுரண்டல்கள் பற்றிப் பேசுவதாலும்.
பா. கண்மணி
28 Jan 2026
சுஜாதா செல்வராஜின் ‘கன்னிமார் சாமி’ சிறுகதைகள்
”பெண்ணால் மட்டுமே உணரக்கூடிய வலிகளின் கதைகள்”
எழுத்தாளர் பா. கண்மணியின் வாசிப்பு அனுபவம்
தொகுப்பைப் படிக்கத் துவங்கியதுமே, க்ராப் சர்ட்டுடன் வலம் வரும் சுஜாதாவுக்குள் இத்தனை தத்ரூபமான கிராமங்களா என வியந்தேன். தமிழில் சிறுவர்கள் அளவிற்கு சிறுமிகள் எழுதப்படவில்லை என்கிற குறையை, தொகுப்பிலிருக்கும் கால்வாசிக் கதைகள் தீர்த்து வைக்கின்றன. இயல்பான வசனங்களும் சரளமான நடையும் எடுத்த புத்தகத்தை வைக்க விடவில்லை…
..ஒரு பெண்ணால் மட்டுமே உணரக்கூடிய வலிகளில் துணிவோடு வெளிச்சம் பாய்ச்சி இருக்கிறீர்கள் … …எழுதுங்கள் சுஜாதா. நம் கதையை நாம் தானே அசலாக சொல்லமுடியும். நீங்கள் வளர்ந்த கிராமத்திலிருந்து நகர்ந்து, படித்த சிறு நகரத்தையும் வாழ்ந்து வரும் நகரத்தையும் எழுத முயலுங்கள். எங்கும் துயரங்களுக்கு பஞ்சமில்லை.
நன்றி: பா. கண்மணி (சுஜாதா செல்வராஜின் முகநூல் பதிவிலிருந்து)
முழுப்பதிவையும் வாசிக்க:
https://www.facebook.com/photo/?fbid=26848280738095624&set=a.839200196097034
வெளி ரங்கராஜன்
9 Feb 2026
சுஜாதா செல்வராஜ் எழுதிய `கன்னிமார் சாமி`
சிறுகதைத் தொகுப்பு பற்றிய பார்வை
“பல்வேறு வாழ்நிலை சித்திரங்கள் இக்கதைகளில் கவனம் பெற்று சமகாலப் பெண் எதிர்கொள்ள நேரும் இருண்ட வாழ்வுக் கணங்கள் மீது வெளிச்சம் பாய்ச்சுகின்றன. இந்த வாழ்வோட்டத்தில் பெண் அடைய நேரும் முதிர்ச்சியும் புரிதலுமே அவள் வாழ்வை மேம்படுத்தும் சாத்தியங்கள் கொண்டிருக்கின்றன.”
நன்றி: வெளி ரங்கராஜன் (முகநூல் பதிவு)
சு.பொ. அகத்தியலிங்கம்
17 Feb 2026
சுஜாதா செல்வராஜின் சிறுகதைத் தொகுப்பு ‘கன்னிமார் சாமி’ பற்றிய பார்வை:
“இந்நூலில் இடம் பெற்றுள்ள 15 கதைகளையும் வாசித்த பின் ஒவ்வொரு ஆணும் குற்ற உணர்சியில் சில நொடிகளாவது மவுனித்தால், அதுவே இந்நூலின் பெருவெற்றி!”
நன்றி: சு.பொ. அகத்தியலிங்கம் (முகநூல் பதிவு)
முழுப்பதிவையும் வாசிக்க: https://www.facebook.com/share/1DHZ6ZzQVN/
சுபி (புழுதி வலைதளத்திலிருந்து)
27 Feb 2026
சுஜாதா செல்வராஜின் ’கன்னிமார் சாமி’ சிறுகதைகள்
புத்தக விமர்சனம்
”அடித்தட்டு, நடுத்தர வர்க்கப் பெண்களின் பாடுகளைப் பேசும் கதைகள்”
நன்றி: சுபி (புழுதி வலைதளத்திலிருந்து)
முழுப்பதிவையும் வாசிக்க:
https://puzhuthi.com/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88/?amp=1&fbclid=IwY2xjawQTVwFleHRuA2FlbQIxMABicmlkETE5cmRjdnpFU20zVlZiRjdxc3J0YwZhcHBfaWQQMjIyMDM5MTc4ODIwMDg5MgABHpGU1b0DL9Gvrm8wAXUcZMGh8p57lix_KwTa3qEMEULSFSS4vy-9Qj77APoQ_aem_5VufIsZHSQcnS0PZEo-U3A&sfnsn=wiwspwa
இடது ஐக்கியம்
14 May 2026
சுஜாதா செல்வராஜின் ‘கன்னிமார் சாமி’ சிறுகதைகள்
”சங்கு சுட்டாலும் வெண்மை தரும்: விளிம்பு நிலை மனிதர்களின் கதைகள்”
…முன்னுரையில் அம்பை இதை வருத்தக் கதைகளின் தொகுப்பு என்று சொன்னதால் கொஞ்சம் நாள் படிக்காமல் அப்படியே வைத்துவிட்டேன், பிறகு ஒருவாறாக மனதைத் தேற்றிக்கொண்டு வாசிக்க ஆரம்பித்தபோது அப்படியொன்றும் துன்பியல் கதைகளாக இல்லை என்று பட்டது! காரணம் கதையை விவரிக்கும் பாங்குதான்! கிராமத்து புழங்கு சொற்களை அவ்வளவு லாவகமாகப் பயன்படுத்திச் செல்கிறார்!...
நன்றி: இடது ஐக்கியம்(முகநூலிலிருந்து)
முழுப்பதிவையும் பார்க்க: https://www.facebook.com/61555946639674/posts/122307952154198221/?mibextid=wwXIfr&rdid=NFC8yRAekGBGXVhp#
சரவணன் மாணிக்கவாசகம் (முகநூல் பதிவிலிருந்து)
None
கதைகள் ஒன்றிரண்டை சிலமாதங்கள் இடைவெளியில் வாசிப்பது என்பது வேறு, தொகுப்பை எடுத்து வைத்து ஒரே மூச்சில் வாசித்து முடிப்பது என்பது வேறு. பின்னதைச் செய்யாது போயிருந்தால் சுஜாதாவின் உண்மையான ஆளுமை எது என்பது எனக்குத் தெரியாமல் போயிருக்கும்.
பெண்ணுடல் மீது ஆண்களுக்கிருக்கும் கற்பனை மயக்கங்கள் சுஜாதாவை வாசித்தால் கலைந்து விடும் என்று சொல்லலாம்.
குறிப்பாக 'அந்தகாரம்' ' தழும்பு' ஆகிய கதைகளில் வரும் முதியபெண்கள். முதுமை பெண்ணுடலில் வரையும் சித்திரம் வேறு. கர்ப்பப்பை இறக்கத்தை மறைத்துக் கொள்வதும், கணவன் கண்டறியாத தழும்பும் பெண்ணுடல் யதார்த்தத்தை ஆரவாரமின்றிச் சொல்கின்றன.
பெண்ணுக்குப் பல அவலங்கள் நேருகின்றன, இந்தக் கதைகளில். குடிகாரக் கணவனால் மட்டுமன்றி, மாமியாராலும் சிரமப்படுகிறார்கள். வீட்டில் வலியக் கட்டிவைத்த திருமணம் தூக்கில் தொங்குவதில் முடிந்தால், ஆசைப்பட்டுக் கட்டிக்கொண்டதும் அடிஉதையுடன் கழிகிறது. அதனால் தான் கணவனின் பாராமுகத்தையே கண்டவளுக்கு, பணத்திற்குச் செய்தாலும் அக்கறையுடன் செய்பவளைக் கட்டி அணைத்துக்கொள்ளத் தோன்றுகிறது.
தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்திலும் கவனித்திருக்கிறேன். கவிஞர்கள் உரைநடை எழுத வரும்பொழுது அவர்கள் அறியாமலேயே சொற்சிக்கனம் உடன் வருகிறது. கூடவே அழகுணர்ச்சியும். "வீட்டிற்குள் நுழைந்து கழிவறை வாசலை நெருங்குகையில் சிறுமழை ஒன்று சடசடவென்று அவள் கால்களுக்கிடையில் பொழிந்து முடிந்தது".
தலைப்புக்கதை மெலோடிராமாகவோ அல்லது உணர்வுவெடிப்பாகவோ நிகழ ஏராளமான வாய்ப்புள்ள கதை. சுஜாதா அளவான வார்த்தைகளால் உணர்வுத்தூக்கலின் நெடி தெரியாத வகையில் கதையை Present செய்திருக்கிறார். 'சலனம்' மற்றொரு அழகான கதை. தோழியின் கணவன் மேல் Crush கொள்ளாதவர் உலகில் யார்? ரம்யா மட்டுமே மாட்டிக் கொள்கிறாள்.
முதல் தொகுப்பு என்பதற்கான எந்த அடையாளமுமில்லாத, எந்த சலுகையும் கோராத தொகுப்பிது. குடித்துவிட்டு நிதானம் தவறிய அப்பாவின் வேட்டி ரோட்டில் அவிழ்கையில் சின்னப்பெண் கன்னத்தில் அறைகிறாள், உடம்புக்கு முடியாத அப்பாவிற்கு Anne French கிரிமை அடிவயிற்றின் கீழ் தடவுகிறாள் மற்றொருத்தி. பெண்கள் வித்தியாசமானவர்கள் மட்டுமல்ல நெருக்கமானவர்களும். உங்களுக்குச் சிறுகதை வடிவம் நன்றாக வருகிறது, ஒருபோதும் எழுதுவதை நிறுத்தாதீர்கள் சுஜாதா.
சு.பொ. அகத்தியலிங்கம் (முகநூல் பதிவு)
None
சுஜாதா செல்வராஜின் சிறுகதைத் தொகுப்பான “ கன்னிமார் சாமி” உறுத்தும் உண்மைகளைப் பேசுகிறது . “ அவலச்சுவை” மேலோங்கி இருக்கும் நூலென முன்னுரை சொல்கிறது . ’கைத்துப்போன வாழ்வின் உணர்ச்சி வெடிப்புகள்’ என்றே எனக்குச் சொல்லத் தோன்றுகிறது.
“…… நம்மள மாதிரி பொம்பள ஜென்மங்க மனசுல ,எல்லாற்றையும் போட்டு, மூடி வச்சு நொதிச்சுப் போய்க் கெடக்கு .அதையெல்லாம் திறந்து வெளியே கொட்டுனா ஆம்பளங்க பவுசு எல்லாம் மண்ணாய்ப் போய்டும் …” ‘காந்தாயி’ சிறுகதையின் முத்தாய்ப்பு வரிகள் இவை . இந்நூல் பேசும் செய்தி அதுதான் . ஒவ்வொரு கதையும் பெண் மனதின் வலியைத்தான் சொல்கிறது .
ஒவ்வொரு கதையும் காயத்தை தடவிக்காட்டும் கதைகள்தாம் . குளிப்பாட்டும் போது அந்தத் தழும்பின் முன் சத்தியமூர்த்தி ஒரு குற்றவாளியாக நின்றிருந்தார். “ என்னம்மா முதுகுல தழும்பு ” என்று கேட்க மனம் தவித்தது . ஆனால் அவள் சொல்லப்போகிற பதிலை எதிர் கொள்ள அவர் அஞ்சினார் …. ’ தழும்பு ‘ கதையில் வரும் இந்தவரிகள் அழுத்தமானவை .
இந்நூலில் இடம் பெற்றுள்ள 15 கதைகளையும் வாசித்தபின் ஒவ்வொரு ஆணும் குற்ற உணர்சியில் சில நொடிகளாவது மவுனித்தால் , அதுவே இந்நூலின் பெருவெற்றி !
எல்லா கதைகளையும் சொல்ல ஆசை . நீங்களே வாசித்து உணர்வதே நன்று .
இவர் கவிஞர் என்பதால் இவர் எழுத்தில் அதில் கூர்மை கொள்கிறது .”ஒரு வீட்டின் உயிர்ப்பு ,சமையில் அறையிலிருந்துதான் ஆரம்பிக்கிறது.” என்ற வரியும் அதைத் தொடர்ந்த சித்தரிப்பும் அதை மெய்பிக்கிறது .
பெண்ணின் ஆழ்மன உணர்வுகளை படம்பிடிக்கும் ஆயிரம் கதைகள் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம் . இந்த ஆண் மையச் சமூகம் உணர ஒன்று இரண்டு போதாது .
ஒரே ஒரு வேண்டுகோள் . அடித்தட்டு மக்கள் எல்லோரும் குடிகாரர்கள் அல்ல . குடி மட்டுமே குடும்ப வாழ்வின் நிம்மதியைக் கெட்டுக்கும் வில்லன் அல்ல .குடி ஒழுக்கம் சார்ந்த பிரச்சனை அல்ல .அது ஓர் நோய் . அது உடல் நலம் சார்ந்த பிரச்சனை . இந்தப் பண்பாட்டுப் புரிதல் நம் சமூகத்துக்கு வர வேண்டும் .இனி வரும் உங்கள் எழுத்துகளிலும் அது தலை காட்டட்டும் .
வாழ்த்துகள் .
செந்தில் ஜெகன்நாதன் (முகநூலிலிருந்து)
23 Mar 2026
காலந்தோறும் பெண்கள் அனுபவிக்கும் தீராத துயரப்பாடுகளை, வெளியுலகம் அறியாத அவர்களின் கண்ணீர் அனுபவங்களை ஆழ்ந்த உணர்வோடு கதைகளாக எழுதியிருக்கிறார் சுஜாதா செல்வராஜ். பல்வேறு குடும்ப, சமூகச் சூழல்களின் நெருக்கடிகளில் சிக்கிக்கொண்டபோதும், தன் சுயத்தை இழக்காமல் நிமிர்ந்து நிற்க முயலும் பெண்கள், எத்தனை துயர் வந்த போதும் இந்த வாழ்க்கை நதியோட்டத்தின் போக்கை உணர்ந்து அதனோடு பயணிக்கும் மன வலிமை கொண்ட பெண்கள், அவரது கதைகளின் உயிரோட்டமான மையமாக திகழ்கிறார்கள்.
கிராமங்களில் “என்னா இது பொம்பளப் பொழப்பு!” என்று சலிப்போடு பேசத் தொடங்கும் மூதன்னையரின் சொற்களில், வாழ்க்கை தந்த வலியும், காலம் அளித்துச் சென்ற அனுபவங்களும் உறைந்திருக்கின்றன. அந்தச் சுமைகளை எல்லாம் உள்ளுக்குள் தாங்கிக்கொண்டே, ஒரு வகை சலிப்பின் மீது அமர்ந்து வாழும் அவர்களின் நிலையை நாம் பார்த்திருக்கிறோம்.
அத்தகைய வாழ்க்கைச் சுவடுகளைக் கொண்ட பெண்கள், இந்தத் தொகுப்பில் உயிரோடு நம்மை எதிர்கொள்கிறார்கள்.
தகப்பன் என்ற ஆதர்ச மனிதனிடம் ஒரு பக்கம் செல்லமும் அன்பும் கண்டபோதும், அதை மீறி அவரது குடிப்பழக்கம் தந்த காயங்களால் மனத்தின் ஆழத்தில் வெறுப்பும் சேர்ந்து கிடக்கும். அன்பும் வெறுப்பும் ஒரே நெஞ்சில் இணைந்து வாழும் அந்த முரண்பாட்டின் சுமை, வளர்ந்த பிறகு குழந்தைகளின் உள்ளத்தில் எப்போதும் ஒரு மென்மையான குழப்பத்தையும் சொல்ல இயலாத கனத்தையும் விட்டுச் செல்கிறது. அப்படியான வாரிசுகள் இந்த கதைகளில் காணக் கிடைக்கிறார்கள்.
பெண்களின் பார்வையிலிருந்து பெண்களின் வலிகளை நோக்கும்போது மட்டுமே சில மறைக்கப்பட்ட உண்மைகள் வெளிப்படுகின்றன என்பதை, அவரது படைப்புகள் அழுத்தமாக உணர்த்துகின்றன. தொகுப்பில் உள்ள கதைகள் எளிமையான மொழியில் மனித உணர்வுகளை வாழ்வின் வீச்சத்தை வாசகனுக்கு வீரியத்துடன் கடத்துகின்றன.
“இப்படியும் நடக்குமா?” என்ற அதிர்ச்சியையும், “இவரைப் போன்ற ஒருவரை நான் அறிவேன்” என்ற நெருக்கத்தையும் ஒரே நேரத்தில் உருவாக்குகிறது சுஜாதா செல்வராஜின் கதைகள். கன்னிமார் சாமி தொகுப்பு நல்லதொரு வாசிப்பு அனுபவத்தை அளித்தது. சுஜாதா செல்வராஜ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்