குமாரநந்தன் கதைகள் தத்துவங்களாலும் கடவுள்களாலும் கைவிடப்பட்ட அல்லது தத்துவங்களிலிருந்தும் கடவுள்களிடமிருந்தும் விடுதலை பெற்றுக்கொண்ட இடத்தில் பிறக்கின்றன. வாழ்வில் சாத்தியமுள்ள வெவ்வேறு நிகழ்தகவுகளால் உருவாகும் சம்பவங்களைக் கதாபாத்திரங்களின் அருகருகே வைக்கும்போது ஏற்படும் மரணத்துக்கு நெருக்கமான அல்லது வாழ்வையே புரட்டிப்போடும் நிகழ்வுகள் இவரிடத்தில் கதைகளாக உருக்கொள்கின்றன.
காலாவதியாகிப்போன விவரித்தல் மொழியிலோ அல்லது வழவழப்பான ரொமான்டிக் கூறுமுறையிலோ அல்லாமல் நேரடியாகவும் கச்சிதமாகவும் கூர்மையாகவும் விவரிக்கப்படுவது இவர் கதைகளின் பலம். அதிகார நிறுவனங்களால் எளிய மனிதர்களுக்கு ஏற்படும் துயரங்களின் வழியே, வாழ்வின் புதிர்களுக்குள், முடிவற்ற தர்க்கங்களுக்குள் வாசகனைத் தள்ளிவிடுபவராக இருக்கிறார் குமாரநந்தன்.