சரத் சந்திர சட்டோபாத்யாய (1876-1938)
1876இல் பிறந்த சரத் சந்திரர் ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்தவர். வறுமை காரணமாகப் படிப்பைப் பாதியில் விட்டவர். வறுமையைப் பற்றி நன்கு அறிந்தவர். ஏழைகள் தங்களிடமிருக்கும் அனைத்தையும் மற்றவர்களுக்குக் கொடுத்துவிடுகிறார்கள். ஆனால் பதிலுக்கு அவர்களுக்கு எதுவும் கிடைப்பதில்லை. வசந்த காலத்தில் குயில் கூவும், எங்கும் வண்ண வண்ண மலர்கள் நிறைந்திருக்கும். ஆனால் ஏழைகள் இத்தகைய அழகு நிறைந்த வசந்த காலத்தைக் கண்டதேயில்லை. அவர்கள் படும் துன்பங்களையும், சந்திக்கும் போராட்டங்களையும் உலகுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்ற எண்ணமே என்னை எழுதத் தூண்டியது என்கிறார் சரத் சந்திரர்.
வடமொழி அதிகம் கலப்பில்லாத மொழி நடையில் சாதாராண சொற்களையே அதிகம் உபயோகித்ததால் இவருடைய கதைகளைப் பாமர மக்களும் படித்து அனுபவிக்க முடிந்தது. ரவீந்திர நாத தாகூரும் சரத் சந்திரரும் கிட்டத்தட்ட ஒரே காலத்தவராயிருந்தாலும் தாகூரின் எழுத்துக்கள் சரத் சந்திரரை எவ்விதத்திலும் பாதிக்கவில்லை.
சரத் சந்திரர் நன்றாகப் பாடுவார். நாடகங்களில் நடித்திருக்கிறார். தபலா போன்ற வாத்தியங்களையும் இசைக்க வல்லவர். ஓவியத்திலும் ஆர்வம் கொண்டவர். இவருடைய முக்கியப் படைப்புகள் ‘பெரிய அக்கா’, ‘பிந்துவின் பிள்ளை’, ‘பரிணீதா’, ‘பிராஜ் பௌ’, ‘பள்ளி சமாஜ்’, ‘தேவதாஸ்’, ‘சரித்ரஹீன்’, ‘தத்தா’, ‘பதேர் தாபி’, ‘பிப்ரதாஸ்’ முதலியன.
இலக்கிய உலகில் ஜாம்பவானாகக் கருதப்பட்ட சரத் சந்திரர் 1938ஆம் ஆண்டு காலமானார்.