இன்றிலிருந்து சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மறைந்த வேலு நாச்சியார் அவர்களின் வாழ்வை அடிப்படையாகக் கொண்ட இந்த புதினம் மிகவும் சிறப்பாக இருக்கிறது.
வேலு நாச்சியார் 66 ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழ்ந்தார். 42 வயது வரை அவருக்கு அரச வாழ்க்கை. இளவரசியாகவும் மகாராணியாகவும் வாழ்க்கை இனிமையாக செல்கிறது.
ஆங்கிலேயர்களால் சிவகங்கை அரசு பறிக்கப்பட அடுத்து 8 ஆண்டுகள் வனங்களில் மறைந்து வாழ்கிறார் கொரில்லா போர் முறையில் ஆங்கிலேயர்கள் தாக்குகிறார். மைசூர் நவாப் ஹைதர் அலியின் உதவியுடன் ஆங்கிலேயர்களை விரட்டி அடித்து விட்டு தனது 50வது வயதில் சிவகங்கையின் மகாராணியாகம் மறுபடியும் அரச வாழ்வுக்குள் வருகிறார். அடுத்த ஆறு ஆண்டுகள் அவர் மகாராணியாக ஆட்சி செலுத்துகிறார்.
வேலு நாச்சியாரின் இறுதி பத்து ஆண்டுகள் மிகவும் துயரம் நிறைந்தது. அவரின் உடல்நிலை, மகளின் வாழ்வு மற்றும் சிவகங்கையின் அரசியல் என எல்லாவற்றிலும் அவர் எதிர்பார்த்தது நடக்கவில்லை.
மருது சகோதரர்கள், உடையாள், குயிலி என்ற கதாபாத்திரங்கள் அல்லது ரத்தம் சதையுமான இந்த மனிதர்கள் நாட்டுக்காக தங்கள் வாழ்வை அர்ப்பணித்துள்ளது இன்றைக்கு பெரும் அதிசயமாக தோன்றுகிறது.
ஆங்கிலேயர்கள் இந்தியாவின் சிறு சிறு அரசர்களை எப்படி எல்லாம் சூழ்ச்சி செய்து தங்கள் ஆளுகைக்குள் கொண்டு வந்தார்கள் என்பதை இந்த கதையில் ஆற்காடு, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய பிரதேசங்களை அவர்கள் கவர்ந்ததிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது.
சுபேந்திராவால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்த நாவல் இல.சுபத்திராவால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. தமிழில் நேரடியாகவே எழுதப்பட்ட நாவலை போன்று மொழிபெயர்ப்பு மிகச் சிறப்பாக இருக்கிறது.
சிறப்பான அட்டைப்படத்துடன் இந்த புத்தகத்தை காலச்சுவடு பதிப்பகம் தீஞ்சொல் வெளியீடாக வெளியிட்டுள்ளது.