இராம. சுந்தரம் மொழியியலில் முனைவர் பட்டம் பெற்றவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம், போலந்து வார்சா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பேராசிரியராகப் பணியாற்றியவர். எழுதிய நூல்கள்: 'சொல் புதிது சுவை புதிது' (1976); 'வையாபுரிப் பிள்ளை' (1993); 'பொருள் புதிது வளம் புதிது' (1994); 'தமிழக அறிவியல் வரலாறு' (2005).
யுனெஸ்கோவின் துணை இயக்குர் நாயகமாகவும் சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் விளங்கிய முனைவர் மால்கம் ஆதிசேசய்யாவின் முயற்சியாலும் தொலைநோக்காலும் உருவானது எம்.ஐ.டி.எஸ். 1971இல் நிறுவப்பட்ட எம்.ஐ.டி.எஸ்., இந்திய அரசின் ஐ.சி.எஸ்.எஸ்.ஆர். அமைப்பின்கீழ் 1977இல் தேசிய நிறுவனமாக அடையாளம் காணப்பட்டுச் சீரமைக்கப்பட்டது. தமிழகத்தின் சமூக, பொருளாதாரப் பிரச்சினைகள் பற்றி ஆய்வு செய்வதற்கென ஓர் உயராய்வு அமைப்பு வேண்டுமென விழைந்த முனைவர் ஆதிசேசய்யா தம் உழைப்பையும் செல்வத்தையும் இதற்காக முழுமையாகக் கையளித்தார்.வறுமை, நிலச் சீர்திருத்தம்,சிறார் தொழிலாளர் நிலை, தொழில் துறை, நீர்வளம், பாசன மேலாண்மை, மக்கள் தொகையியல், எழுத்தறிவு, இடஒதுக்கீடு, உள்ளாட்சி, ஊரக ஆய்வுகள், சமூக-பண்பாட்டு வரலாறு, பாலினம். உலக வர்த்தகம் முதலானவை பற்றிய முன்னோடியான, சீரிய ஆய்வுகளை எம்.ஐ.டி.எஸ். நிகழ்த்தியுள்ளது. எம். ஐ. டி. எஸ். சென்னைப் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்ற பிஎச்.டி. ஆய்வு மையமாகும்.