Your cart is empty.
விருந்து (இ-புத்தகம்)
-தம் ரத்த உறவுகளின் மீது உயிரனைய நேசம் வைத்திருக்கும் எளிய மனிதர்களின் ஈரச் சித்திரம் இத்தொகுப்பின் பெரும்பான்மையான கதைகளில் தீட்டப்பட்டுள்ளது. குறைவான சொற்களில் பாத்திரங்களின் அகநிலைகள் சாத்தியப்படுத்தப்பட்டுள்ள கலை அமைதி கூடிய இந்தக் கதைகளில் சிறார் உலகின் பரிசுத்தம் , பெண்களின் நிகழ் - கடந்த காலத் துயர், குடும்ப அமைப்பில் ஆண்களின் புற - அக நெருக்கடிகள், முதியவர்களின் நோய்மை படிந்த தனிமை, அதிகாரத்தின் முன் சாதாரணமானவர்கள் ஒன்றுமில்லாமல் ஆக்கப்படுதல், பாலியல் விருப்பு, மீறல் ஆகியவை நம் மனத்தின் சமன் குலையும் விதத்தில் பதிவாகியுள்ளன. இத்தொகுப்பில் ‘முடிவு’ கதையைக் கடக்க முடியவில்லை. நழுவும் வேட்டியைக் கட்டிக்கொண்டே ஆஸ்பத்திரிக்கு மகளைத் தூக்கிச் செல்லும் தகப்பனைப் பற்றிய இக்கதை கே.என். செந்திலின் கலைஉச்சம் என்று கூறலாம்.
சக உயிர்களின் இழப்பும் பிரிவும் ஒரு பிரபஞ்சத் துயரமாகிவிடும்போது அச்சமயத்திற்கான மீட்சிபோல தன்னியல்பாகப் புனைவாகியுள்ள இக்கதைகளின் வாசிப்பனுபவம் ஓட்டுமொத்த மானுடத்தின் மீது நம் கரிசனம் குவியும் இடத்திற்கு நம்மை நகர்த்துகிறது. இது இக்கதைகளை மேலும் முக்கியத்துவமானதாக ஆக்குகிறது.











