-இந்த நாவல் அனுபவங்களின் அப்பட்டமான உணர்வுகளின் ஆதாரத்தில் எழுதப்பட்டது. ஆனால் கற்பனைதான் என்கிறார் பா. விசாலம் தன் முன்னுரையில். குழந்தைப் பருவத்திலிருந்து இயக்கத் தோழரையே மணப்பதுவரை போகும் கதையைப் படிக்கும்போது அதிலுள்ள விசாலத்தின் ஆழமான உணர்வுகள் மற்றும் சொந்த அனுபவங்களின் கனத்தை அறிந்துகொள்ள முடிகிறது. பெயரில்லா இந்தக் கதையின் நாயகியை நான் விசாலம் என்றே படித்தேன். அந்த அன்னம் வானில் பறப்பதையும் அது தாமரைக்குளத்தில் இறங்குவதையும் உணர முடிகிறது. அத்துடன் அதன் சோர்வையும் தனிமையையும்கூட. முன்னுரையில் அம்பை
பா. விசாலம்
பா. விசாலம் (பி. 1932) வங்காளத்தில் பர்த்மான் மாவட்டம், அஸன்ஸாலில் உள்ள குல்டியில் பிறந்தார். காசி பயணத்தின் பின் பிறந்த குழந்தையாதலால் காசி விசாலாட்சியின் நினைவில் அவருக்கு விசாலம் என்ற பெயர் சூட்டப்பட்டது. குடும்பத்தின் ஒன்பதாவது குழந்தை. திருவிதாங்கூரின் தமிழ்ப் பேசும் பகுதியான நாஞ்சில் நாட்டில் வளர்ந்தவர். 1952இலிருந்து பொதுவுடைமைக் கட்சியில் தீவிரமாக இயங்கினார். அக்கட்சியைச் சேர்ந்த மைக்கேல் ராஜுவை 1964இல் திருமணம் செய்து கொண்டார். ‘மெல்லக் கனவாய், பழங்கதையாய். . . ’ இவரது முதல் நாவல்; 1994இல் வெளிவந்தது. 1995இல் இந்நாவலுக்கு புதுச்சேரி அரசு ‘கம்பர் புகழ்’ விருதளித்து கௌரவித்தது. இரண்டாம் நாவல் ‘உண்மை ஒளிர்க என்று பாடவோ’ 2000இல் வெளிவந்தது. 2006இல் ‘மெல்லக் கனவாய், பழங்கதையாய். . . ’ மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. 2012இல் மீரா ராஜகோபாலன் மொழிபெயர்ப்பில் ‘Fading Dreams, Old Tales’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் ‘ஆக்ஸ்போர்ட் யூனிவர்சிடி ப்ரெ’ஸால் வெளியிடப்பட்டது. தற்போது புதுச்சேரியில் கணவருடன் வாழும் பா. விசாலம், தன் எண்பத்திநாலாம் வயதில் சுயசரிதை எழுதும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். மகள் : சித்ரா, மகன் : மோஹன்.