காலந்தோறும் பெண்கள் அனுபவிக்கும் தீராத துயரப்பாடுகளை, வெளியுலகம் அறியாத அவர்களின் கண்ணீர் அனுபவங்களை ஆழ்ந்த உணர்வோடு கதைகளாக எழுதியிருக்கிறார் சுஜாதா செல்வராஜ். பல்வேறு குடும்ப, சமூகச் சூழல்களின் நெருக்கடிகளில் சிக்கிக்கொண்டபோதும், தன் சுயத்தை இழக்காமல் நிமிர்ந்து நிற்க முயலும் பெண்கள், எத்தனை துயர் வந்த போதும் இந்த வாழ்க்கை நதியோட்டத்தின் போக்கை உணர்ந்து அதனோடு பயணிக்கும் மன வலிமை கொண்ட பெண்கள், அவரது கதைகளின் உயிரோட்டமான மையமாக திகழ்கிறார்கள்.
கிராமங்களில் “என்னா இது பொம்பளப் பொழப்பு!” என்று சலிப்போடு பேசத் தொடங்கும் மூதன்னையரின் சொற்களில், வாழ்க்கை தந்த வலியும், காலம் அளித்துச் சென்ற அனுபவங்களும் உறைந்திருக்கின்றன. அந்தச் சுமைகளை எல்லாம் உள்ளுக்குள் தாங்கிக்கொண்டே, ஒரு வகை சலிப்பின் மீது அமர்ந்து வாழும் அவர்களின் நிலையை நாம் பார்த்திருக்கிறோம்.
அத்தகைய வாழ்க்கைச் சுவடுகளைக் கொண்ட பெண்கள், இந்தத் தொகுப்பில் உயிரோடு நம்மை எதிர்கொள்கிறார்கள்.
தகப்பன் என்ற ஆதர்ச மனிதனிடம் ஒரு பக்கம் செல்லமும் அன்பும் கண்டபோதும், அதை மீறி அவரது குடிப்பழக்கம் தந்த காயங்களால் மனத்தின் ஆழத்தில் வெறுப்பும் சேர்ந்து கிடக்கும். அன்பும் வெறுப்பும் ஒரே நெஞ்சில் இணைந்து வாழும் அந்த முரண்பாட்டின் சுமை, வளர்ந்த பிறகு குழந்தைகளின் உள்ளத்தில் எப்போதும் ஒரு மென்மையான குழப்பத்தையும் சொல்ல இயலாத கனத்தையும் விட்டுச் செல்கிறது. அப்படியான வாரிசுகள் இந்த கதைகளில் காணக் கிடைக்கிறார்கள்.
பெண்களின் பார்வையிலிருந்து பெண்களின் வலிகளை நோக்கும்போது மட்டுமே சில மறைக்கப்பட்ட உண்மைகள் வெளிப்படுகின்றன என்பதை, அவரது படைப்புகள் அழுத்தமாக உணர்த்துகின்றன. தொகுப்பில் உள்ள கதைகள் எளிமையான மொழியில் மனித உணர்வுகளை வாழ்வின் வீச்சத்தை வாசகனுக்கு வீரியத்துடன் கடத்துகின்றன.
“இப்படியும் நடக்குமா?” என்ற அதிர்ச்சியையும், “இவரைப் போன்ற ஒருவரை நான் அறிவேன்” என்ற நெருக்கத்தையும் ஒரே நேரத்தில் உருவாக்குகிறது சுஜாதா செல்வராஜின் கதைகள். கன்னிமார் சாமி தொகுப்பு நல்லதொரு வாசிப்பு அனுபவத்தை அளித்தது. சுஜாதா செல்வராஜ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்