Your cart is empty.
முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம்
விதியுடன் பிணைந்த மானுட இருப்பின் அவலத்தை உக்கிரமாகச் சித்தரிக்கும் மார்க்கேஸின் சிறந்த குறுநாவல் இது.
தன் மனைவி கன்னிப் பெண்ணல்ல என்று அவளைத் திருப்பி அனுப்பும் கணவன், போகிறபோக்கில் சந்தியாகோ நாஸாரின் பெயரை உதிர்க்கும் ஆங்கெலா, இழந்த கௌரவத்தை மீட்கப் புறப்படும் இரட்டைச் சகோதரர்கள், இவர்களில் பலியாகப் போவது யார்?
இது கொலையைத் துப்பறியும் புனைவல்ல. மௌனத்தின் வழியே உடன்-கொலையாளியாக மாறும் சமூகத்தின் கூட்டு மனசாட்சியைத் துப்பறியும் விசாரணை. கலாச்சாரம் என்னும் பாவனை, அதிகாரத்தின் கணப்பொழுது மெத்தனம் என அனைத்தும் சேர்ந்து மனிதனை பலிபீடத்தில் கொண்டு நிறுத்துவதை இந்நாவல் விவரிக்கிறது.
லத்தீன் அமெரிக்கக் கிராமங்களில் நிலவிய ஆணாதிக்க ஒழுக்கப் பார்வையையும், விதியின் தப்ப முடியாத சுழல்வழியையும் இதழியல் துல்லியத்தோடு ஆவணப்படுத்துகிறது மார்க்கேஸின் இந்த ஆக்கம்.
காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ்
காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் ஸ்பானிய மொழி நவீன இலக்கியத்துக்கு வழங்கிய கலைக் கொடை கொலம்பிய எழுத்தாளர் காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ். மொழியிலும் கதை சொல்லும் முறையிலும் பார்வையிலும் புதிய திசைகளைத் திறந்துவிட்ட எழுத்து மார்க்கேஸுடையது. அவரது வருகைக்குப் பின்பு அவரின் எழுத்து வகையால் தூண்டுதல் பெறாத இலக்கியப் போக்கும் பாதிக்கப்படாத எழுத்தாளர்களும் எந்த மொழியிலும் இல்லை. அவரது மாய எதார்த்தத்தால் வசீகரிக்கப்படாத இலக்கிய வாசகரும் எந்த மொழியிலும் எந்தப் பிரதேசத்திலும் இல்லை. அவரைவிட ஆழமான எழுத்தாளர்களும் அவரைவிட சுவாரசியமான கதைசொல்லிகளும் இருக்கலாம். ஆனால் இலக்கியச் செறிவையும் வெகுவான வாசகப் பரப்பையும் ஒரே சமயத்தில் வசப்படுத்திக் கொண்டதில் மார்க்கேஸுக்கு நிகரானவர்கள் இல்லை. ஷேக்ஸ்பியர், தால்ஸ்தோய், செர்வாண்டிஸ், விக்டர் ஹியூகோ ஆகியோரின் வரிசையில் நவீன உலகம் கண்ட பெருங்கலைஞர் காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ்.



















