Your cart is empty.
கனவுப் புத்தகம்
ஆண்மை உணர்வு அவமானப்படுத்தப்படுவதன் விளைவாகக் கொலைவெறி கொள்ளும் சிலம்பாட்டக் கலைஞன், வேலை வாய்ப்பின் பொருட்டு அவமானத்தை வலிந்து ஏற்கும் இளம் கணவன், தீவிர சுய பிரக்ஞையுடன் தனது பாலியல் தன்மையைத் தன் அதிகாரத்திற்கான ஆயுதமாகப் பயன்படுத்தும் பெண், சக்களத்திகளாகி மோதிக்கொள்ளும் தாயும் மகளும் என வாழ்வின் அனைத்து விளிம்புகளிலிருந்தும் வெளிப்படுகிறார்கள் சாணக்யாவின் கதை மாந்தர்கள். சாணக்யாவின் எழுதுகோல், சிலம்பாட்டக் கலைஞனின் கைச்சிலம்பாக மாறி வாழ்வின் சொற்களை வெளியெங்கும் நிறைக்கிறது. கவித்துவமும் செறிவும் நிரம்பிய சொற்கள் உருவாக்கும் வாழ்க்கைச் சித்திரங்கள் தமிழின் பரந்த புனைவுவெளிப் பரப்பில் பிரத்யேக அடையாளத்துடன் உயிர் பெறுகின்றன. காலமும் இடமும் கலைத்துப் போட்டிருக்கும் வாழ்வின் புள்ளிகளை இணைத்தபடி செல்லும் இப்பயணத்தின் வழித்தடங்களில் இதுவரை நாம் பார்க்காத சில முகங்களேனும் காணக் கிடைக்கின்றன. நாம் பார்த்திராத முகங்கள். அறிந்திராத நிகழ்வுகள். நம் அனுபவத்திற்கு வசப்படாத வாழ்க்கை. தீராத வியப்புணர்வைத் தூண்டும் கனவின் புனைவுத் தன்மையுடனும் தவிர்க்க முடியாமல் நம் கவனத்தைக் கோரும் யதார்த்தத்தின் பதிவுகளுடனும் நம் முன் சுழல்கிறது சாணக்யாவின் புனைவுலகம். சிறந்த சிறுகதைக்கான" கதா "விருது பெற்ற சாணக்யாவின் இரண்டாம் தொகுப்பு இது.











