Your cart is empty.
எங்கள் ஐயா
‘எங்கள் ஐயா’ வாசிக்கையில் உண்டான புதுப் பரவசம் ஒருபக்கம்; நான் விடைபெற்று வெளியேறி வந்து ஆண்டு பலவான வகுப்பறையின் பழைய ஞாபகங்களின் தாக்கம் மற்றொரு பக்கம். நின்று நின்று வாசித்தேன். ‘எங்கள் ஐயா’ என்ன வகையான நூல்? ஆசிரியப் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு மிக அவசியமான பாடப்புத்தகம் இது. ‘உளவியலைச் செயல்முறை வடிவில் காட்டியவர் எங்கள் ஐயா’ என்று அவருடைய மாணவர்கள் சொல்வது மிகச் சரி. ஆசிரியர் மாணவர் உறவின் விசாலங்களை அறியவும் நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ளவும் வடிவமைக்கப்பட்ட ஒருவகைச் சிற்ப நூலும்கூட இது. அதுவும் எப்படிப்பட்ட வடிவில்? விழுங்கக் கடினமான தியரிகளின் வடிவிலா? இல்லை. அரைத்த விழுதாக அனுபவங்களின் வடிவில் கிடைக்கிறது. சாறு எடுத்துக் குடிப்பதில் என்ன சங்கடம்? பேராசிரியர் ச. மாடசாமி
ப.ர்: பெ. முத்துசாமி, ஆ. சின்னதுரை, ரெ. மகேந்திரன், ப. குமரேசன்
எழுத்துலகில் பெருமாள்முருகன் (பி. 1966) என்று அறியப்படும் பெ. முருகன், அரசு கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் பணியில் இருபது ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டவர். அவரிடம் பயின்ற மாணவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள். அவர்களில் சிலர் தமது அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளும் கட்டுரைகளைக் கொண்ட நூல் இது. தனிநபர் ஆளுமையை மையப்படுத்திய கட்டுரைகள் எனினும் அதைக் கடந்து ஆசிரியர் மாணவர் உறவின் பல பரிமாணங்களை எடுத்துக்காட்டுவனவாக இவை அமைந்துள்ளன. ‘கட்டுரையாளர்கள் இன்று ஆசிரியர்களாகவும் ஆய்வாளர்களாகவும் படைப்பாளிகளாகவும் மின்னிப் பிரகாசிக்கிற நம்பிக்கை நட்சத்திரங்கள். ஆனால் மாணவப் பருவத்தில் கடினமான பாதைகளில் பயணம் செய்து வந்தவர்கள். நடந்துவந்த பாதைகளை அவர்கள் மறக்கவுமில்லை; மறைக்கவுமில்லை’ என அணிந்துரையில் பேராசிரியர் ச. மாடசாமி கூறுகிறார். பதிப்பாசிரியர்கள்: பெ. முத்துசாமி (1975), ஆ. சின்னதுரை (1978), ரெ. மகேந்திரன் (1982), ப. குமரேசன் (1986). நால்வரும் அரசுப் பணியில் உள்ளனர். முதல் இருவரும் சேலம், ஆத்தூர் பகுதியைச் சேர்ந்தவர்கள். பின்னிருவரும் நாமக்கல் பகுதியைச் சேர்ந்தவர்கள். தமிழ் இலக்கியம் பயின்றவர்கள். நவீன இலக்கிய வாசிப்பிலும் தொகுப்பு, பதிப்பு ஆகிய பணிகளிலும் மெய்ப்புப் பார்த்தலிலும் ஈடுபாடும் பயிற்சியும் கொண்டவர்கள். கட்டுரைகளைத் தொகுத்துச் செம்மைப்படுத்தி இந்நூலைப் பதிப்பு என்னும் நிலைக்கு உயர்த்தியுள்ளது இவர்களின் உழைப்பு.











