Your cart is empty.
ஒரு புளியமரத்தின் கதை
1966இல் முதல் பதிப்பு வெளிவந்த காலத்திலிருந்து தீவிர வாசகர்களின் கவனத்தில் இருந்துவரும் ‘ஒரு புளிய மரத்தின் கதை’ ஒரு நவீன செவ்வியல் புனைவாக நிலைபெற்றுவிட்டது. மலையாளத்திலும் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை பெங்குயின் வெளியிட்டது. 2000த்தில் தமிழிலிருந்து நேரடியாக ஹீப்ருவில் மொழிபெயர்க்கப்பட்ட ‘ஒரு புளியமரத்தின் கதை’ குறுகிய காலத்தில் இரண்டு பதிப்புகள் கண்டதுடன் அம்மொழிக்குச் சென்றுள்ள முதல் இந்திய மொழி நூல் என்ற பெருமையையும் பெறுகிறது. ஒப்பீட்டிலக்கிய விமர்சகர் கே. எம். ஜார்ஜ் இந்நாவலை நோபல் பரிசுபெறத் தகுதியான தமிழ் நாவலாகக் குறிப்பிடுகிறார்.
சுந்தர ராமசாமி
சுந்தர ராமசாமி (1931 - 2005) தமிழின் முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவரான சுந்தர ராமசாமி நாகர்கோவிலில் பிறந்தார். பள்ளியில் மலையாளமும் ஆங்கிலமும் சமஸ்கிருதமும் கற்றார். 1951இல் ‘தோட்டி யின் மக’னைத் தமிழில் மொழிபெயர்த்ததே முதல் இலக்கியப் பணி. 1951இல் புதுமைப்பித்தன் நினைவு மலரை வெளியிட்டார். இவரது முதல் கதையான ‘முதலும் முடிவும்’ அதில் இடம் பெற்றது. மூன்று நாவல்களும் பல கட்டுரைகளும் சுமார் 60 சிறுகதைகளும், பசுவய்யா என்ற பெயரில் கவிதைகளும் எழுதினார். 1988இல் காலச்சுவடு இதழை நிறுவினார். சுந்தர ராமசாமிக்கு டொரொன்டோ (கனடா) பல்கலைக்கழகம் வாழ்நாள் இலக்கியச் சாதனைக்கான ‘இயல்’ விருதை (2001) வழங்கியது. வாழ்நாள் இலக்கியப் பணிக்காகக் ‘கதா சூடாமணி’ விருதையும் (2003) பெற்றார். சுந்தர ராமசாமி 14.10.2005 அன்று அமெரிக்காவில் காலமானார்.











